Friday, July 18, 2025
Home செய்திகள்Showinpage ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

ரூ.27,000 கோடியில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

by Arun Kumar

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். சென்னையில் பொது போக்குவரத்து சேவையாக மாநகர பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டாலும், சொந்த வாகனங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், எத்தனை மேம்பாலங்கள், இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டாலும் போக்குவரத்து பிரச்னையை தீர்ப்பது பெரிய சவாலாக உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து முயற்சி செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இன்றைய சூழலிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் போது, எதிர்காலத்தில் இதைவிட அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை 92 கிலோமீட்டர் தூரத்திற்கு, கடல்வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எண்ணூர் முதல் பூஞ்சேரி வரை, கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்திய கூறு அறிக்கையை தயாரிக்க, ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோராயமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ரூ.27,600 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக ரூ.5400 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக ரூ.9000 கோடியிலும், மூன்றாவது கட்டமாக ரூ.13,200 கோடியிலும் செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடல் வழிபாலமாக அமைக்கப்பட உள்ளதால், சுற்றுச்சூழலுக்கு மற்றும் கடல் வளம் பாதிக்காத வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தும் போது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட உள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi