Wednesday, July 16, 2025
Home செய்திகள் முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு பதிலடி; இங்கிலாந்து 465 ரன்னுக்கு ஆல்அவுட்: 99 ரன்னில் ஆட்டமிழந்த புரூக்

முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு பதிலடி; இங்கிலாந்து 465 ரன்னுக்கு ஆல்அவுட்: 99 ரன்னில் ஆட்டமிழந்த புரூக்

by MuthuKumar

லீட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 3வது நாளில் இங்கிலாந்து அணி, 465 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த 20ம் தேதி துவங்கிய முதல் போட்டியில், முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா 471 ரன் குவித்தது. அதையடுத்து, 2வது நாளின் கடைசியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்திருந்தது. ஒல்லி போப், 100, ஹாரி புரூக் 0 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை அவர்கள் நேற்று தொடர்ந்தனர். பிரசித் கிருஷ்ணா வீசிய 47வது ஓவரில், ஒல்லி போப் (106 ரன்), விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின் வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (20 ரன்), முகம்மது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதையடுத்து, ஜேமி ஸ்மித், ஹாரி புரூக்குடன் இணை சேர்ந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடி 73 ரன் சேர்த்திருந்த நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய 80வது ஓவரில், சாய் சுதர்சனிடம் கேட்ச் தந்து ஜேமி ஸ்மித் (40 ரன்) நடையை கட்டினார். பின்னர், கிறிஸ் வோக்ஸ், ஹாரியுடன் இணை சேர்ந்தார்.

சிறிது நேரத்தில் பிரசித் வீசிய ஓவரில், ஷர்துல் தாக்குரிடம் கேட்ச் தந்து, 7வது விக்கெட்டாக அவுட்டான ஹாரி புரூக் (99 ரன்), சதத்தை நழுவ விட்டார். அதையடுத்து, பிரைடன் கார்ஸ் வந்தார். வோக்ஸ், கார்ஸ் அதிரடியால் மளமளவென ரன்கள் சேர்ந்தன. இவர்கள், 44 பந்துகளில் 55 ரன் சேர்த்த நிலையில், சிராஜ் பந்தில் கார்ஸ் (22 ரன்) அவுட்டானார். பின், ஜோஷ் டாங் ஆட வந்தார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய 99வது ஓவரில் வோக்ஸ் (38 ரன்) ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு, ஷோயப் பஷீர் களமிறங்கினார். பும்ரா வீசிய 101வது ஓவரில் டாங் (11 ரன்) ஆட்டமிழந்ததை அடுத்து, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் 465 ரன்னுடன் முடிவுக்கு வந்தது. அதனால், இந்தியா 6 ரன் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில், பும்ரா 5, பிரசித் 3, சிராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

வாசிம் அக்ரமை முந்திய பும்ரா
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுகள் மூலம், சேனா எனப்படும், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியுசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் நடந்த போட்டிகளில் பும்ரா எடுத்த விக்கெட்டுகள் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்தது. இதையடுத்து, சேனா நாடுகளுடனான போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக பும்ரா உருவெடுத்துள்ளார். இப்பட்டியலில், 146 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பட்டியலில், இந்திய வீரர்கள் அனில் கும்ப்ளே (141 விக்கெட்) 3ம் இடத்திலும், இஷாந்த் சர்மா (130 விக்கெட்) 4ம் இடத்திலும் உள்ளனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi