Sunday, July 20, 2025
Home செய்திகள்Showinpage பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

by Arun Kumar

* கவுன்சலிங் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.
* அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை (ஜூன் 7, 8ம் தேதி) நடைபெறுகிறது.
* பொதுக் கலந்தாய்வு, பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு பிரிவுகளுக்கு 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கும்.

சென்னை: நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 445 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ, மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் 11ம் தேதி 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் சான்று சரிபார்க்கப்பட்டுள்ளது. இதன்படி பொறியியல், பி.டெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளவர்கள் 2,41,641 பேர். அவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2342 பேர் தொழிற் கல்வியின் கீழும் தகுதி பெற்றுள்ளனர். மொத்த விண்ணப்பங்களில் 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மேற்கண்ட மாணவ, மாணவியரின் தரவரிசை பட்டியலை ஜூன் 27ம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியன் வெளியிட்டார். அதன்படி, 144 மாணவ, மாணவியர் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். இவர்களில் 139 பேர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள். மீதம் உள்ள 5 பேர் இதர வாரியங்களின் கீழ் படித்தவர்கள். இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் இன்று மற்றும் நாளை (ஜூலை 7, 8ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு 7.5 விழுக்காட்டின் கீழ் 51,004 பேர் பொறியியல் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்திருந்தார்கள். இதில் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 47,372 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 15,149 கூடுதலாகும்.

இதையடுத்து பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவு மாணவ மாணவியருக்கான கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு 9ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலும், பொதுக் கலந்தாய்வு, பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு பிரிவுகளுக்கு 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கும். பிறகு துணைகலந்தாய்வு இணைய தளம் மூலம் ஆக. 21ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், எஸ்சிஏ காலியிடங்கள், எஸ்சி பிரிவினருக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 25,26ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi