சென்னை: டிடிவி.தினகரனின் வங்கி கணக்கில் வெளிநாட்டிலிருந்து ரூ.63 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அவரை திவாலானவர் என்று அறிவிக்க முடியாது என்று டிடிவி தரப்பில் ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது. அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரனின் வங்கி கணக்கில் கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து ரூ.62.61 லட்சம் அமெரிக்க டாலர் அங்கீகாரமற்ற முகவர் மூலமாக டெபாசிட் ஆனதாகவும், பின்னர் அவர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியுள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் டிடிவி.தினகரன் மீது பெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு டிடிவி.தினகரனுக்கு ரூ.31 கோடி அபராதம் விதித்து மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி.தினகரன், டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை பரிசீலித்த மேல்முறையீட்டு ஆணையம், அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.31 கோடி அபராதத்தை ரூ.28 கோடியாக குறைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த அபராதத்தை எதிர்த்து டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை அவரை அவமானப்படுத்தும் நோக்கிலேயே இதுபோல திவாலானவர் என அறிவிக்க கோரி இருப்பதாகவும், இது உரிமையியல் நீதிமன்றத்தால் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னை எனவும் கூறி கடந்த 2003ம் ஆண்டு டிடிவி.தினகரனுக்கு சாதகமாக உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, பெரா சட்டத்தின் கீழ் டிடிவி.தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ. 28 கோடி அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அவர் இந்த தொகையை பல ஆண்டுகளாக செலுத்தாமல் காலதாமதம் செய்து வருகிறார்.
தொகையை செலுத்தாத பட்சத்தில் அவரை திவாலானவர் என சட்டப்படி அறிவிக்கக் கோருவதில் எந்த தடையும் இல்லை. அதற்காக இதை உரிமையியல் சார்ந்த பிரச்னையாக பார்க்கக்கூடாது. இந்த நடவடிக்கையை அவர் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து டிடிவி.தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி வாதிடுகையில், ‘‘திவாலானவர் என அறிவிக்க அது உரிமையியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதைத்தான் உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதைவிடுத்து அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது, என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். தொகையை செலுத்தாத பட்சத்தில் அவரை திவாலானவர் என சட்டப்படி அறிவிக்கக் கோருவதில் எந்த தடையும் இல்லை.