Sunday, July 20, 2025
Home செய்திகள்Banner News டாஸ்மாக் வழக்கில் சோதனை நடத்த அதிகாரமில்லை அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் வழக்கில் சோதனை நடத்த அதிகாரமில்லை அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

by Francis

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இதையடுத்து, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கிரி, விஜயநாராயண், அபுடுகுமார் ராஜரத்தினம் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆவணங்களை தாக்கல் செய்தார். தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் படி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக நம்புவதற்கு உரிய காரணங்கள் இருந்தாலும், சந்தேகிப்பதற்கு காரணங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தலாம். இந்த வழக்கை பொறுத்தவரை 41 முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன. அந்த அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன என்று தெரிவித்தார்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களுக்கும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் முன்வைக்கும் வாதத்திற்கும் ஒத்துப் போகவில்லை. வீட்டை சீல் வைப்பதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, சோதனைக்கு சென்ற இடத்தில் வீடு, அலுவலகம் பூட்டியிருந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மனுதாரர்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்ப பெற்றுக் கொள்கிறோம் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், சீல் வைப்பதற்கு அதிகாரம் இல்லை என்றபோது அமலாக்கத்துறை எப்படி சீல் வைத்தது என்று கேட்டனர். பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். அதில், டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரவரம்பும் இல்லை. எனவே, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அப்போது, இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அமலாக்கத் துறை முன் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi