வேலூர்: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…’ என்ற பாடலை பாடி அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானத்தை நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் துரைமுருகன் புறப்படும்போது நிருபர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரது நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவது குறித்து கேட்டனர். அதற்கு அவர், ‘அப்படியா? உண்மையிலேயே எனக்கு தெரியாது’ என்று கூறினார். தொடர்ந்து பொன்முடி வீடு மற்றும் நிறுவனங்களில் நடக்கும் ரெய்டு குறித்து என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டதற்கு, ‘என்னதான் நடக்கும், நடக்கட்டுமே…’ பார்க்கலாம் என்று பாட்டைப் பாடியபடியே அமைச்சர் துரைமுருகன் கிளம்பி சென்றார்.