Friday, May 16, 2025
Home செய்திகள்Banner News அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம்

அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம்

by Ranjith

* முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம், ஜூன் 1ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம்

சென்னை: அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 1ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

இதில், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை த.வேலு, சிற்றரசு, ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் அனைவருக்கும், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* இந்திய துணைக்கண்டத்தில்-மக்கள் நலன் போற்றும் வகையில், மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தீரத்துடன், சமூகநீதியைப் பாதுகாத்து, சட்டமன்ற மாண்பினை நிலைநாட்டி, ஜனநாயக கோட்பாடுகளை உயர்த்தி பிடிக்கும் அரசாகவும், ஒன்றிய பா.ஜ. அரசின் எதேச்சதிகார போக்கிலிருந்து அரசியல்சட்டம் தந்துள்ள கூட்டாட்சி கருத்தியலை பாதுகாக்கும் முதன்மையான மாநில அரசாகவும் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து – ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசின் – மக்களின் மகத்தான பேரன்பை பெற்ற முதல்வராகவும்-இந்தியாவிற்கே ரோல் மாடலாக – தமிழ்நாட்டின் தனிப் பெருந்தலைவராகவும் திகழும் திமுக தலைவர், முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி-ஒன்றிய பா.ஜ. அரசிடம் தொடர்ந்து குரல் எழுப்பி – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை நாட்டு மக்களுக்கும் – ஒன்றிய அரசுக்கும் உணர்த்தி – தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பை பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அரசியல் சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக ஆளுநரின் கையெழுத்தின்றி உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துச் சட்டமியற்றும் அதிகாரத்தை தனது சட்டப் போராட்டம் மூலம் பெற்று, ஆளுநர் அடாவடியாக நிறைவேற்ற மறுத்த பத்து மசோதாக்களை சட்டமாக்கி சகாப்தம் படைத்து, “சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே” – “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே – நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை” என்ற வரலாற்று சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்று, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியது மட்டுமின்றி, இந்த தீர்ப்பின் மூலம், இந்திய கூட்டாட்சி வரலாற்றில் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைகளை பெற்றுத் தந்திருக்கிறார்.

அதோடு, வரலாற்றில் மீண்டும் மாநில சுயாட்சிக்காக உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை நியமித்துள்ள திமுக தலைவரும் – முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாராட்டுதலை பதிவு செய்து கொள்கிறது. முதல்வருக்கு துணையாக செயலாற்றி வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும்; அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது.

* வளர்ச்சி சார்ந்த எந்த ஓர் இலக்காக இருந்தாலும் அதில் இந்திய ஒன்றியத்தின் சராசரியைவிட தமிழ்நாடு கூடுதலான அளவில் முன்னேறியிருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 விழுக்காடு என்றால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.69 விழுக்காடு; தேசிய சராசரியான 2.06 லட்சம் என்பதைவிட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3.58 லட்சம் என 1.74 மடங்கு அதிகரிப்பு; தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 47 விழுக்காடு; நிலையான வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது இடம்;

சமூக முன்னேற்ற குறியீட்டில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்; வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் வெறும் 1.43 விழுக்காடாக குறைவு; மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2.25 கோடி மக்கள் பயன்; இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு மருத்துமனைகளில் அதிகமான படுக்கைகள்; இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம்; மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்; தோல் பொருட்கள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் முதன்மை மாநிலம்;

நாட்டிலேயே காவல்துறையில் அதிக பெண் அதிகாரிகள் பணிபுரியும் மாநிலம்; அதுமட்டுமல்ல, சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருப்பதில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று திராவிட மாடல் அரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் அடுக்கடுக்கான சாதனைகளால் தமிழ்நாடு இன்றைக்கு முன்னிலையில் இருக்கிறது.

மக்களை முன்னேற்றும் முத்திரை திட்டங்களான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’, ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’, ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘புதுமைப்பெண் திட்டம்’, ‘தமிழ் புதல்வன் திட்டம்’, ‘நான் முதல்வன் திட்டம்’, ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, ‘இல்லம் தேடிக் கல்வி’, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என அனைத்துத் திட்டங்களும் – தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும் – தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும் முன்னோடியாக திகழ்வதை மற்ற மாநிலங்கள்கூட இன்று திரும்பிப் பார்க்கின்றன.

திமுக அரசின் இந்த சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன், 868 ஒன்றியங்கள் – 224 பகுதிகள் – 152 நகரங்கள் என மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்தப்படும்.

* நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத தேசிய சக்தியாக திமுக திகழ்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நின்று தமிழ்நாட்டின் நலன் காத்து வருவதுடன் – இன்று அகில இந்திய அரசியலில் திமுக தலைவரின் கருத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ஓங்கி நிற்கிறது.

பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை நிறைவேற்றி-தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், நம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகவும், சமத்துவம், சமூகநீதி, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் காக்கும் மாபெரும் இயக்கமாக முன்வரிசையில் நிற்கும் திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வருகிற ஜூன் 1ம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று கூட்டம் தீர்மானிக்கிறது.

* நீதித்துறை உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளிலும் அத்துமீறி குறுக்கிட்டு – அந்த அமைப்புகளின் சுதந்திரத்தை பறித்து வருவதோடு-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகும் வகையில் அதிகார அத்துமீறல் செய்து – அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் ஒன்றிய பாஜ அரசுக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளதன் விளைவாக இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு இந்த அமைப்புகளை ஆளாக்கி, அதிமுக போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பா.ஜ. அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை “பழிவாங்கும் நடவடிக்கை” எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து; இப்போது டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதையும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்கிறது.

திமுகவினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பா.ஜ. அரசு பயன்படுத்துவதை திமுக சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஏற்கனவே திமுக தலைவர்-முதல்வர் சொன்னபடி, அமித்ஷா அல்ல; எந்த ஷா வந்தாலும்-அவர்கள் எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும்-மக்கள் மன்றத்தில் ஒன்றிய பா.ஜ. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் கூட்டம் தீர்மானிக்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெறும் போது கைது செய்யப்பட்ட நடவடிக்கையை ‘பழிவாங்கும் நடவடிக்கை’ எனக் கூறிய அமலாக்கத்துறையைப் பார்த்து; இப்போது டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அந்த அமைப்புகளில் நடக்கும் ஊழல்களை கண்டித்துக் கொண்டு இருப்பதை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பதிவு செய்கிறது.

* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மட்டுமே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ரெய்டுக்கும், சோதனைகளுக்கும் இலக்காகிறது.

* இத்தகைய அதிகார அத்துமீறல் செய்து – அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை உருவாக்கி வரும் ஒன்றிய பாஜ அரசுக்கு கடும் கண்டனம்.

* அமித்ஷா அல்ல; எந்த ஷா வந்தாலும் – அவர்கள் எத்தனை பரிவாரங்களைச் சேர்த்துக் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டுவோம்.

* மக்கள் மன்றத்தில் ஒன்றிய பா.ஜ. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைப்போம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi