புதுடெல்லி: சட்டீஸ்கர் தேர்தல் தோல்வியை தவிர்க்க தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறை நடவடிக்கையை ஏவி வெறி நாய்களைபோல சுற்றி வளைத்து பூபேஷ் பாகெல் நற்பெயரை கெடுக்க பாஜ சதி செய்வதாக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகாதேவ் ஆப் தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் பூபேஷ் பாகெல், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடமிருந்து ரூ508 கோடி பணம் பெற்றதாக தெரிவித்தது.
இதுதொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், அபிஷேக் சிங்வி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: மகாதேவ் சூதாட்ட செயலி துபாயிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்திய 450 பேரை சட்டீஸ்கர் அரசு கைது செய்து, 70 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் முதல்வர் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஒன்றிய அரசுக்கு அந்த செயலியை முடக்க கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அது பற்றி கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இப்போது சிலரை கைது செய்து, பாகெல் மீது கற்பனை புகார் அறிக்கை அளிக்க செய்துள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளிக்கும். சட்டீஸ்கர், ராஜஸ்தான் தேர்தலில் பாஜ தோல்வி உறுதியாகி விட்டது. அதனால், தனது கடைசி ஆயுதமான அமலாக்கத்துறையை ஏவி வெறிநாய்களைப்போல முதல்வர் பூபேஷ் பாகெலை சுற்றி வளைக்க பாஜ உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் பாகெலின் நற்பெயரை கெடுப்பதே பாஜவின் சதித்திட்டம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். 28% ஜிஎஸ்டி விதித்து சட்டப்பூர்வமாக்கியது ஏன்? அபிஷேக்சிங்வி கூறுகையில்,’ மகாதேவ் செயலி இன்னும் செயல்பாட்டில் உள்ளது. மோடி-ஷா-சீதாராமன் ஆகியோர் கூட்டணி இந்தியாவில் உள்ள அனைத்து ஆன்லைன் ஆப்களையும் சட்டப்பூர்வமாக்கி உள்ளனர். இந்த நேர்மையற்ற செயல்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.
* காங்கிரஸ் பயப்படாது; கார்கே
மத்திய பிரதேசம் பாலகாட் மாவட்டம் காதங்கி நகரில் நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிய கார்கே, ‘காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சி.பி.ஐ, ஐ.டி, ஈ.டி ரெய்டுகளை ஏவி விட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் பயந்து போய் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விடுவார்கள் என்று பாஜ நினைக்கிறது. காங்கிரஸ் ஒரு போதும் பயப்படாது. சட்டீஸ்கர், ம.பி மாநிலங்களில் காங்கிரஸ் வெல்லப்போவதை பாஜ பார்க்கத்தான் போகிறது ’ என்று தெரிவித்தார். என்னை விசாரிக்காமல் குற்றம் சுமத்தியது ஏன்?
ராய்ப்பூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பூபேஷ் பாகெல், ‘பாஜ எப்போதும் நேரடியாக மோதாமல், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றின் துணையோடு தேர்தலில் போட்டியிடும். என்னிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளாமலேயே குற்றம் சுமத்தப்பட்டது ஏன்? மகாதேவ் செயலி உரிமையாளர்களை இதுவரை ஒன்றிய அரசு கைது செய்யாமல் தேடப்படுபவர்களாக ஏன் அறிவித்தது? இன்னும் அந்த சூதாட்ட செயலி முடக்கப்படாமல் ஏன் விட்டு வைக்கப்பட்டுள்ளது? அதனால் சூதாட்ட உரிமையாளர்களோடு மோடி மற்றும் அவர் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக நான் நேரடியாகவே குற்றம் சாட்டுகிறேன்’ என்று அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.