புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி வழங்கிய உத்தரவு விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரித்தார். நீதிபதி வழக்கு குறித்து தனது கருத்தை தெரிவிக்கையில், ‘செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். அவர் குற்றம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று இரண்டு நீதிபதி அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மேற்கண்ட மூன்றாவது நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு வந்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதில், செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் மட்டும் இதோடு சேர்த்து அமலாக்கத்துறை மொத்தம் மூன்று கேவியட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.