சென்னை: தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஆராய்ச்சிக் கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்தெடுத்து வருகிறோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னைப் பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி முர்மு சென்னை பல்கலை கழக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களை வாழ்த்தி பேசியதாவது: பள்ளிக் கல்வியை வளர்த்தார் காமராசர். கல்லூரிக் கல்வியை முத்தமிழறிஞர் கலைஞர் விரிவு செய்தார். இன்று நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம்.
ஆராய்ச்சிக் கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்தெடுத்து வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள்களைப் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் எனது கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டம் சிறந்து விளங்கி வருகிறது. ஆண்டுக்குப் 10 லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறனில் மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு. மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக வழங்கப்படுகிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்களின் புதிய ஆராய்ச்சிச் சிந்தனைகளுக்குப் புத்துயிர் வழங்கும் விதமாக “முதலமைச்சரின் ஆராய்ச்சித் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கென தமிழ்நாடு அரசால் ஆண்டுக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டின் வரலாறு, எதிர்கால இலக்கு, பொருளாதார வளர்ச்சி, தொழில்சார் சிந்தனைகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசு தனித்துவமான “மாநிலக் கல்விக் கொள்கை” வடிவமைப்பதில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. “தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்” என்ற புதிய சீர்மிகு திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விதமாக “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” எனும் புதுமைப்பெண் திட்டம் மூலம் பெண்கல்வியை ஊக்குவித்து வருகிறோம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆட்சிப் பணித் தேர்வுகள், திறன்சார்ந்த தேர்வுகளுக்குத் தங்களைத் தயார் செய்யும் பொருட்டு மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பட்டம் வாங்குவதோடு உங்களது படிப்பு முடிந்து விடுவது இல்லை. ஒரே பட்டத்துடன் நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். தகுதியான வேலை கிடைத்த பிறகும் படிப்பதை நிறுத்திவிடாதீர்கள். யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். அது அறிவியல் வழிப்பட்டதாக, பகுத்தறிவாக எதையும் கேள்வி கேட்டு ஆராயும் அறிவாக இருக்குமானால் உங்களை யாராலும் வெல்ல முடியாது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நிதி ஆதாரப் பெருக்கத்திற்கும் தமிழ்நாடு அரசும் உயர்கல்வித் துறையும் என்றென்றும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
*கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம்
தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில்தான் உள்ளன. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளன. 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. 40 பல்மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன.30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளன. 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளன.இப்படி நான் அடுக்கிக் கொண்டே போக முடியும். கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.