மதுரை: சமீபத்தில் எத்தனை என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளன என்பது குறித்து காவல் துறை விளக்கம் அளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்த சத்யஜோதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், எனது சகோதரர் வெள்ளை காளி என்ற காளி முத்து, 2019ம் ஆண்டு முதல் புழல் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த மாதம் கிளாமர் காளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார்.
இதில் எனது சகோதரருக்கும், அவரது குடும்பத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் கொலை சம்பவத்தில் சகோதரரை தொடர்புபடுத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், எனது சகோதரரை விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனை தடுக்கும் விதமாக விசாரணையை காணொலியில் நடத்தவும், அந்த வீடியோ பதிவை நீதிமன்றத்தில் சம்பர்ப்பிக்கவும் உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி தனபால் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அண்மைக்காலமாக என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன; எத்தனை என்கவுன்ட்டர்கள் சமீபமாக நடந்துள்ளன? என்று நீதிபதி எழுப்பி உள்ளார். காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள்; போலீசாரின் பாதுகாப்புக்காக மட்டுமே துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி, காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர் என்றார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்.29க்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை நீதிபதி தனபால் உத்தரவிட்டுள்ளது.