Sunday, June 15, 2025
Home செய்திகள்Banner News சுசி ஈமு கோழி மோசடி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதிப்பு

சுசி ஈமு கோழி மோசடி உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.7.89 கோடி அபராதம் விதிப்பு

by Arun Kumar

கோவை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சுசி ஈமு கோழி உரிமையாளர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7.89 கோடி அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.அபராதத்தை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

ஆஸி. நாட்டு பறவையான ஈமு கோழியை வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் எனக்கூறி ஈரோட்டில் 2011ல் குருசாமி மோசடி செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த குருசாமி, பெருந்துறையில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதன் கிளை அலுவலகம் பொள்ளாச்சியிலும் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் அளித்து, பராமரிப்புத் தொகையாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மாதம் தலா ரூ.6 ஆயிரம், ஆண்டு போனாக ரூ.20 ஆயிரம் தரப்படும் என்றும். ஒன்றரை ஆண்டுகள் கழித்து முழு பணமும் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்தனர்.

ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்நிறுவனம் 1,087 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 19 கோடி மோசடி செய்ததாக பொள்ளாச்சி தேவனம்பாளையத்தைச் சேர்ந்த கண்டியப்பன் என்பவர் 2012 ஆகஸ்ட் 10-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு போவீஸார் வழக்கு பதிவு செய்து, குருசாமியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்டகசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குருசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7.89 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத்தை மேல்முறையீட்டு காலம் முடிந்த பின்னர் 385 முதலீட்டாளர்களுக்கும் பிரித்து வழங்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi