அண்ணாநகர்: முதல் திருமணத்தை மறைத்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, குளிர்பானத்தில் மயக்க மருத்து கொடுத்து இளம் பெண்ணிடம் உல்லாசமாக இருந்த ஐடி ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் கடந்த இருதினங்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரப்பரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்ததாவது, சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றுகிறேன். என்னுடன் பணியாற்றும் அஜித்(31) என்பவர் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும் காதலிப்பதாகவும் கூறினார். இதனால் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தோம். திடீரென ஒருநாள் தன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் உறவினர்களை அழைத்துவந்து பெண் கேட்பதாகவும் கூறினார். இதனால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னிடம் ஜாலியாக இருந்தார். அப்போது எனக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்ததுடன் வீடியோ எடுத்துவைத்து என்னிடம் காண்பித்தார். அந்த வீடியோவை அழித்துவிடுங்கள் என்று கெஞ்சியபோதும் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில்தான் அஜித் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. இதன்பிறகு அந்த வீடியோக்களை காண்பித்து அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகிறார். சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கம் இல்லாமல் தவித்து வருகிறேன். இதனால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளேன். எனவே முதல் திருமணத்தை மறைத்து என்னிடம் தவறாக நடந்துகொண்ட அஜித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குபதிவு செய்து அஜித்தை நேற்றுமுன்தினம் கைது செய்து விசாரித்தனர். இதில் தனது முதல் திருமணத்தை மறைத்து ஐடி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியதும் குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து உல்லாசமாக இருந்ததும் வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டியதும் உண்மை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.