சென்னை: சென்னை பெருநகர காவல்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் இணைந்து, ஆவடி இரவு மாரத்தான்-2023, பாகம்-2 போட்டி ஆவடியில் உள்ள வேல் டெக் பல்கலை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. சென்னை பெருநகர ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி, 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டி, வேல்டெக் பல்கலைக்கழகத்தில் தொடங்கி, மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக நெமிலிச்சேரி சுங்கச்சாவடி வழியாக சென்று மீண்டும், வேல் டெக் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்தது.
இதில், வீரர்களுக்கு அனைத்து போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மற்றும் உணவு, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த போட்டியில் 5 கி.மீ. தூர மாரத்தான் பிரிவுக்கு 15 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 கி.மீ. மற்றும் 21 கி.மீ. தூர மாரத்தான் பிரிவுகளுக்கு 8 வயதுக்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர். குறிப்பாக, 6,000 பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் பரிசு பெற்ற பெண் காவலர் அனுபிரியா, 2ம் பரிசு வெற்றி பெற்ற பெண் காவலர் நீலாம்பரி, 3ம் பரிசு வெற்றி பெற்ற பெண் காவலர் இளவரசி ஆகியோருக்கு பதக்கங்கள், பண வெகுமதிகள் மற்றும் சான்றிதழ்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.