திருமலை: தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் ஜவஹர் நகரில் குப்பையில் இருந்து மின் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இந்த வளாகத்தில் நேற்று புகைபோக்கி அமைக்கும் பணிகள் நடந்தது. இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான ஒரு லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுரேஷ் சர்க்கார் (32), பிரகாஷ் மண்டல் (38) மற்றும் அமித்ராய் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். 3 தொழிலாளர்களையும் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.