கூடலூர்: மசினகுடி பகுதியில் சாலை ஓரத்தில் ஓடும் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானையை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை மற்றும் மசினகுடி பகுதி வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
வனப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் சாலை ஓர வனப்பகுதிகளில் தன்னிச்சையாக மேயும் யானைகள், மான்கள், காட்டு மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களையும் பார்த்து செல்கின்றனர்.இந்நிலையில், மசினகுடி அருகில் ஊட்டி சாலையோரம் உள்ள மாயாற்றின் கிளை ஆற்றில் நேற்று காட்டு யானை ஒன்று தண்ணீர் குடித்து அப்பகுதியில் நடமாடியது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.