சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயத்தின்படி புதிய மின் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதில், வீட்டு நுகர்வோர்களுக்கான கட்டண செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. தமிழகத்தில் வீடு உள்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் விநியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின்வாரியம் மேற்கொள்கிறது. மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. தமிழகத்தில் மின்வாரியத்தின் கடும் நிதி நெருக்கடியை கருதி கொண்டு கடந்த 2022ம் ஆண்டு மின் கட்டணம் என்பது உயர்த்தப்பட்டது. அப்போது வெளியிட்ட ஆணையின்படி ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி (நேற்று) முதல் மின் கட்டணத்தை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி 2025- 2026 நிதி ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டது.
பெரிய தொழில் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சிறு நிறுவனங்கள் மற்றும் குறைந்த தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் ஐநூறு யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கு யூனிட்டுக்கு 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ7.15 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், உயர் அழுத்த மின்பயன்பாடு கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.25 காசுகள் உயர்த்தபட்டு ரூ.7.50 காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்,அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில்களுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.25 காசுகள் விலை உயர்த்தப்பட்டு ரூ.7.75 காசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டிட பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டு யூனிட்டுக்கு ரூ.13.25 காசுகள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், வீட்டு மின் நுகர்வோர்கள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட மின்கட்டணத்தை அரசு ஏற்று கொண்டு அதற்கான மானியத் தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.