*திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம் : திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித்தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையம், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டிவனம் அடுத்த ஊரல் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ஏழுமலை (34). இவர் நேற்று முன்தினம் திண்டிவனம்-மரக்காணம் சாலை வள்ளலார் நகரில் உள்ள முருகன் என்பவரது வீட்டில் கூலி வேலை செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திண்டிவனம் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் வீட்டின் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் உயிரிழந்த ஏழுமலைக்கு நிவாரண தொகை வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து திண்டிவனம் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் திரண்டிருந்த பொதுமக்கள் வாகனங்களில் ஊரல் கிராமத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.