ஐதராபாத்: தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் உணர்ச்சி வசப்பட்டு தரையில் அழுது புரண்ட தெலங்கானா எம்எல்ஏ. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்த தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் ஆளும்கட்சியான சந்திரசேகர ராவின், பாரத ராஷ்டிர சமிதி கட்சி தேர்தலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி விட்டது. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 இடங்களுக்கான வேட்பாளர்களை நேற்று சந்திரசேகர ராவ் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தான் 2 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். முன்னாள் துணை முதல்வராக இருந்த தாட்டிகொண்ட ராஜய்யாவுக்கு வரும் தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. தற்போது கான்பூர் (ஸ்டேசன்) தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கட்சி தலைவரான சந்திரசேகர ராவ் அனுமதி மறுத்துள்ளார். மற்றொரு மூத்த தலைவரான கடியம் ஹரியை அந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளார். இதனால் ராஜய்யா, அதிருப்தி அடைந்தார்.
இதையடுத்து அவர் நேற்று அம்பேத்கர் சிலை மையத்தை அடைந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஜெய் ராஜய்யா, ஜெய் தெலங்கானா என்று முழக்கமிட்டனர். அப்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உணர்ச்சி வசப்பட்டு அழுது புரண்டார். அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.
அடுத்தகட்டமாக அவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது பற்றி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. சொந்த கட்சியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவி ஒருவர், சில மாதங்களுக்கு முன்பு ராஜய்யா மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கூறியது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.