புதுடெல்லி: வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்காக 40 ஆப்ஸ்கள், வெப் ஆப்களை ஒருங்கிணைக்க டிஜிட்டல் தளம் ஒன்றை தேர்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது. சமீபத்தில் நடந்த தலைமை தேர்தல் ஆணையர் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார் பேசும் போது,தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனித்துவமான டிஜிட்டல் தளத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்காக இசிஐநெட் என்ற புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது,40க்கும் மேற்பட்ட ஆப்கள்,வெப் ஆப்கள் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் தளமாக இருக்கும். இதில் தரவுகள் மிக துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் அதிகாரிகள் மூலமாக தரவுகள் பதிவேற்றம் செய்யப்படும். இசிஐநெட்டில் தேர்தல் ஆணையத்தின் ஆப்களான வாக்காளர் உதவி ஆப்,வாக்குபதிவு விவரம் குறித்த ஆப்,சிவிஜில், சுவிதா, சாக்ஷம்,கேஒய்சி ஆப் உள்ளிட்டவை ஒருங்கிணைக்கப்படும். புதிய தளம் பயனர்கள் பல செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்தும், வெவ்வேறு லாக் இன்-களை நினைவில் வைத்திருப்பதிலிருந்தும் ஏற்படும் சுமையைக் குறைக்கும்.