Wednesday, February 12, 2025
Home » அரசுக்கு பிரச்னை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை திரும்ப பெற வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

அரசுக்கு பிரச்னை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை திரும்ப பெற வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

by Dhanush Kumar

மதுரை: அரசுக்கு பிரச்னை ஏற்படுத்தும் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்து உள்ளது. தென்காசியைச் சேர்ந்த கல்யாணி, ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் ெசய்த மனுவில், ‘‘தென்காசி மாவட்டம் இலஞ்சி அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1994ல் ஆசிரியையாக சேர்ந்தேன். என்னை நிரந்தர பணியிடத்தில் நியமிக்காமல், வேறொருவரை நியமித்துள்ளனர். அதை ரத்து செய்து என்னை நிரந்தர ஆசிரியையாக நியமித்து, பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.மதி பிறப்பித்த உத்தரவு:

நாட்டிலுள்ள மாணவர்களின் தரத்தையும், கல்வியையும் மேம்படுத்தும் நோக்கில் தான் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையுள்ள ஆசிரியர்களின் அறிவு மற்றும் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக கல்வித்தகுதி பெறும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் மனுதாரருக்கு உரிய கல்வித்தகுதி இல்லை என்று கூறி, ஊக்கத்தொகையையும், பதவி உயர்வையும் வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. தகுதித்தேர்வில் மனுதாரர் 66.6 மதிப்பெண் பெற்றபோதும், அவருக்கான பதவி உயர்வை பணி நியமன குழுவும் நிராகரித்துள்ளது. தொடர்ந்து மனுதாரரை புறக்கணிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர்.

ஆனால் மனுதாரர் தனது உரிமைக்காக பல ஆண்டுகளாக போராடியுள்ளார். ஒரு பள்ளியில் இருக்கும் ஆசிரியர் அதே பள்ளியில் பதவி உயர்வு பெற தகுதியானவர் என விதிமுறைகள் கூறுகின்றன. அந்த வகையில் மனுதாரர் பதவி உயர்வு பெற தகுதியானவர். ஆனால் பள்ளி நிர்வாகம் பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. எனவே, இவருக்குரிய இடத்தில் மேற்கொள்ளப்பட்ட வேறு ஒருவரின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. அந்த பணியிடத்தில் மனுதாரரை நியமிக்க வேண்டும். இதுபோன்ற பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூகநலனுக்காக மட்டும்தான். பள்ளி நிர்வாகம் தனி நிர்வாகத்தில் ஈடுபட்டு, அரசுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடாது. இவர்களின் பாரபட்சமான அணுகுமுறையால் இதுபோன்ற வழக்குகள் அரசின் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் பாதிக்கிறது. கல்வி நிறுவனத்தை முறையாக நடத்த நிர்வாகம் முன்வரவில்லை என்றால், நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்து, அந்த கல்வி நிறுவனத்துக்கு வழங்கப்படும் மானியத்தை திரும்பப் பெற வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தொடரும் இதுபோன்ற வழக்குகளால் அரசு பாதிக்கப்பட வேண்டியதில்லை. அவர்கள் அற்பமான வழக்குகள் தொடர்ந்து, முறையாக செயல்படவில்லை என்றால் அவர்களை தேவையில்லாமல் அரசு சுமக்க வேண்டாம். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

nine + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi