புதுடெல்லி: புதிய தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கிறது. இதனால் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறைக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாட்டில் ஒரு மாணவர் பல மொழிகளை கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? அவர்கள் மீது இந்தி அல்லது வேறெந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை.
இந்த விஷயத்தில், தமிழ்நாட்டில் சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்களுக்கான பொதுவான தளம். பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கல்விக் கொள்கை, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நான் அனைத்து மொழிகளையும் மதிக்கிறேன். தமிழ் நமது நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று’’ என்றார்.


