சேலம்: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்தது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறைத்துக் காட்டியும், தான் படித்த படிப்பினை தெளிவாக குறிப்பிடாமலும், தவறுதலாக கொடுத்திருந்தார் என்று தேனியை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவானது சேலம் குற்றவியல் நடுவர் எண் 1, நீதிபதி கலைவாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அச்சமயம் மனு தொடர்பாக உண்மை இருக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி கலைவாணி, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒருமாதமாக விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி வங்கி கணக்கு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், படிப்பு போன்றவை குறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்கு பிறகு 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் இன்று சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு விசாரணை அறிக்கையை முழுமையாக தாக்கல் செய்தனர். வழக்கறிஞர் மிலானி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலும் உண்மை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.