தஞ்சை: எடப்பாடி பழனிசாமியுடன் அமமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் சனாதனத்தை பற்றி உதயநிதி பேசியதும் தவறு. சனாதனம் என்பது என்னவென்று தெரியாமல் பேசியுள்ளார். அதற்காக தலையை சீவி விடுவேன் என்பது காட்டுமிராண்டித்தனமானது. பெண்களுக்கு சமஉரிமை. சமத்துவம் என சூழல் மாறிவிட்ட பிறகு, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு இருந்ததை இப்போது ஒப்பீட்டு பேசுவது சரியானதல்ல என தெரிவித்தார். தன் மீதான அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றார்.
ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியம் ஆகாது என்றும் கூறினார். தொடர்ந்து மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி பச்சோந்தி மாதிரி, அவர் ஆட்சியில் இருக்கும் போது ஒரு நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்பார்; இப்போது வேண்டும் என்பார். இபிஎஸ் உடன் கூட்டணி சேருவதை அமமுக தொண்டர்கள் விரும்பவில்லை; தேர்தல் நேரத்தில் ஒருவேளை எடப்பாடியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தாலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என தெரிவித்தார்.