Sunday, June 22, 2025
Home செய்திகள்Showinpage எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார் வெள்ளைக்கொடி காட்டப்போகிறார் என்று என்னிடம் வெள்ளை கொடியும் இல்லை; அவரிடம் இருக்கும் காவி கொடியும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார் வெள்ளைக்கொடி காட்டப்போகிறார் என்று என்னிடம் வெள்ளை கொடியும் இல்லை; அவரிடம் இருக்கும் காவி கொடியும் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

by Arun Kumar

சென்னை: எடப்பாடி பழனிசாமி வெள்ளைக் கொடி காட்டப் போகிறார் என்று சொன்னார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை, அவரிடம் இருக்கக்கூடிய காவிக் கொடியும் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் முன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன பாக்கி இருக்கிறது என்று ஒரு பட்டியலிட்டு பேசியிருக்கிறேன்.

குறிப்பாக, பள்ளிக் கல்வித் துறைக்கான, தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய சமக்ர சிக்‌ஷா திட்டத்திற்கான நிதியைப் பெறுவது, அதுபோல கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டங்கள், அங்குள்ள விமான நிலையங்களை விரிவாக்குவது, சென்னையில் பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைப்பது, செங்கல்பட்டு, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக ஆக்கவேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்திருக்கிறோம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மாண்பை நிலைநிறுத்தக்கூடிய வகையில் அவர்களுடைய ஜாதி பெயர்களின் விதிகளை மாற்றுவது, கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர் மக்களை ஆதிதிராவிடர் பட்டியலில் சேர்ப்பது, இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களையும் மற்றும் அவர்களது படகுகளையும் மீட்பது ஆகிய கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி பேசியிருக்கிறேன். நிதி ஆயோக் கூட்டம் முடிந்த பிறகு, பிரதமரை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தேன். ஐந்து நிமிடங்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி, இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள் வருமாறு: நீங்கள் பிரதமரை சந்தித்த போது என்ன சொன்னார்? என்ன சொல்வார்? செய்ய மாட்டார் என்றா சொல்லப்போகிறார். செய்வேன் என்றுதான் சொல்வார். செய்வாரா, செய்ய மாட்டாரா என்பது போகப்போகத்தான் தெரியும். தொடர்ச்சியாக நீங்கள் கோரிக்கையை வைத்துக் கொண்டு வருகிறீர்கள். அதற்கான சட்டப் போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறீர்கள். உங்களுடைய கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வந்து சேரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது, நான் அந்த கோரிக்கையை வலியுறுத்தி சொன்னபோது, அதை உடனே செய்து கொடுத்தார். அதை நினைவுபடுத்தி நன்றி தெரிவித்த போது, நீங்கள் வந்து சொன்னதால் நான் செய்தேன் என்று சொன்னார். அதுபோல, இப்போது இதை சொல்லியிருக்கிறேன், இதையும் நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.தமிழகத்திற்கு கல்வி நிதி கிடைக்குமா? நம்பிக்கையோடு இருப்போம்.

அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தை முன் வைத்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான கடுமையான போக்கை அமலாக்கத்துறையின் மூலமாக ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இதுகுறித்து தலைமை நீதிபதியின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? நியாயமான கருத்து தான். நீதிபதி சொன்னது நியாயமான கருத்தை தான் சொல்லியிருக்கிறார். பல மாநிலங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறது, தமிழகத்திலும் அதைச் சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி….அது எல்லாம் அரசியல்ரீதியாக செய்வது. அதை நாங்கள் சந்திப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் நீங்கள் டெல்லி வந்த பயணத்தை விமர்சித்திருந்தார். ஆனால் அதே அதிமுகவின் புகழேந்தி முதல்வர் வெளிப்படைத்தன்மையுடன் சென்று நிதி குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார் மறைமுகமாக அல்ல என்று சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லியிருக்கிறார். வெள்ளைக்கொடி காட்டப் போகிறார் என்று சொன்னார். என்னிடம் வெள்ளைக் கொடியும் இல்லை, அவரிடம் இருக்கக்கூடிய காவிக் கொடியும் இல்லை.

சோனியா காந்தி, ராகுல்காந்தி சந்திப்பு பற்றி….அது மரியாதை நிமித்தமான சந்திப்பு, எப்போது டெல்லிக்கு வந்தாலும், அவர்களை சந்திக்காமல் நான் செல்வதில்லை. அதன் அடிப்படையில் சந்தித்திருக்கிறேன். தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருப்பேன். அதேநேரத்தில், அரசியலும் பேசினோம், அதை இல்லையென்று சொல்லவில்லை. ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறார்கள். மணல்குவாரிலும் ஐயாயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கிறது.

அது எல்லாம் பித்தலாட்டம், பொய். தேவையில்லாமல் பொய்யை பரப்பி, பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறதா?
அந்தந்த துறையின் அமைச்சர்கள் அப்போதைக்கப்போது மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், இதை திட்டமிட்டு செய்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரங்களிலும் அதை செய்வார்கள். நாங்கள் அதையெல்லாம் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi