சேலம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி இனி தப்பிக்க முடியாது என பெங்களூரு புகழேந்தி கூறினார். அதிமுக உட்கட்சி விவகாரம், சின்னம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்திற்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம் என கூறியுள்ளது. இதுகுறித்து இந்த வழக்கை தொடர்ந்தவர்களில் ஒருவரான பெங்களூரு புகழேந்தி கூறியதாவது: இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியிடமும் இனி விசாரணை தொடங்கும்.
இனிமேல் எடப்பாடி பழனிசாமியால் எதையும் மறைக்கவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது. இதன் மூலம் அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். அதற்கு முன்பாக கட்சியில் இருந்தும் அரசியலில் இருந்தும் அவர் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் மறைவால்தான் எடப்பாடி முதல்வர் ஆனார். அப்படிப்பட்டவர், மேடையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என தெரிந்ததும் மேடை ஏறலாமா? எடப்பாடி பழனிசாமிக்கு அகம்பாவம் தலைக்கு ஏறிவிட்டது. இதன்மூலம் அதிமுக தொண்டர்களின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.