சென்னை: டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: அன்றைய காலகட்டத்தில் பெரும் பணம் செலவழித்து கட்சி ஒன்று, சென்னை ஆவடியில் நடத்த இருந்த மாநாடு பற்றிய பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் இன்று நடக்க உள்ள துரோகிகளின் மாநாட்டோடு பொருந்துவது போல் உள்ளது. தம்பி, பெரும் பணம் செலவழித்து, தோரணங்களும் தோகைகளும் ஓவியங்களும் கொண்டு மாநாடு நடத்தி பயன் எதுவும் வராது.
திறமை மிக்க ஓவியன் ஒருவன் காட்டில் உள்ள நல்ல கனி தரும் மரங்களை அப்படியே நம் கண்முன்னே கனிகள் காய்த்து தொங்குவதை போல் ஓவியமாக வரைந்தான். அனைவரும் கண்டு மெய்சிலிர்த்து வியந்தனர். ஆனால் தம்பி, அந்த ஓவியத்தில் உள்ள கனிகளை கண்டு ரசிக்க தான் முடியுமே தவிர அதனை உண்டு நம் பசியை போக்க முடியாது.
அதே போன்று தான் தம்பி.. பெரும் பணம் மட்டுமே செலவழித்து நடத்தப்படும் மாநாடுகள் மக்களிடம் துளியும் நம்பிக்கை பெறாது. அவை அனைத்தும் பயனற்றது. சாதனைகளை காட்டி ஓட்டு வாங்கிட முடியாது என்றாலும் நோட்டுகளை காட்டி ஓட்டுகளை வாங்கிடலாம் என்ற துணிவு தான் தம்பி, அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.