சென்னை: பாஜவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த சில மாதங்களாக எடப்பாடியை மறைமுகமாக எதிர்த்து வரும் செங்கோட்டை உள்ளிட்ட அனைத்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜவுடனான கூட்டணி குறித்தும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கி பேசினார். முக்கியமாக, பாஜ தலைமை கொடுத்த நெருக்கடியின் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. அதனால் கட்சி தலைவர்களை உடனடியாக அழைத்து ஆலோசனை நடத்த முடியவில்லை. அதிமுக – பாஜ கூட்டணி தேர்தல் கூட்டணிதான். அதேநேரம் அதிமுக கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளதால், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து வருகிற மே 2ம் தேதி அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எடப்பாடி கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தியதாக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சில மாவட்ட செயலாளர்களை தனியே அழைத்து எடப்பாடி சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.