சென்னை:சட்டப்பேரவையில் நேற்று காவல், தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி அருகிலேயே இது நடக்கிறது. டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகும் மதுபாட்டில்கள் விற்பனை சட்ட விரோதமாக நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்கள் ஆட்சியில் குட்கா விற்பனை கொடிகட்டி பறந்தது. போலீஸ் அதிகாரிகளே சம்பந்தப்பட்டிருந்தார்கள். ஆனால் நாங்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அவற்றை கட்டுப்படுத்தியிருக்கிறோம், கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி: திமுக ஆட்சியில் உளவுத்துறை செயல் இழந்து விட்டது. உளவுத்துறை எதிர்க்கட்சிகளை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விமானத்தில் ஏறி வந்து தமிழகத்தில் கொள்ளையடிக்கிறார்கள்.
தமிழக காவல்துறையை பார்த்து குற்றவாளிகளுக்கு அச்சம், பயம் இல்லாத சூழல் உள்ளது. வெளிமாநில கொள்ளையர்கள் சென்னையை தேர்ந்தெடுப்பது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின்: குற்றவாளிகளை விமானத்தில் ஏறி கைது செய்தது தவறு என கூறுகிறாரா எதிர்க்கட்சி தலைவர். உங்கள் ஆட்சியில் தானே டெல்லியில் இருந்து வந்து கொள்ளை சம்பவத்தை நடத்தினார்கள். தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால்தான் கொள்ளையர்கள் வருகிறார்கள்.
அமைச்சர் துரைமுருகன்: சென்னையில் ரவுடிகளே இல்லாத நிலையை இன்றைக்கு முதல்வர் உருவாக்கி காட்டி இருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இல்லை, இல்லை. உங்களுடைய ஆட்சியில் ஐஜி, டிஜிபி, கமிஷனர் குட்கா விற்ற விவகாரங்களெல்லாம் தெரியாதா? இன்னும் சொல்கிறேன். தமிழ்நாடு அமைதியாக இருக்கின்ற காரணத்தில்தான், தைரியமாக கொள்ளையடிப்பதற்கு வருகிறார்கள்.
தமிழ்நாடு அமைதியாக இருப்பதுதான் அதற்கு காரணம். ஆனால், இருந்தாலும் அவர்களையும் பிடித்திருக்கிறார்கள். காவல்துறை விழிப்போடு இருந்து, அவனை கைது செய்தது மட்டுமல்ல; கைது செய்து அவனுக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும். அதிமுக ஆட்சியில், 2020ல், டெல்லியிருந்து வந்து கொள்ளையடித்துக்கொண்டு சென்ற விவகாரமெல்லாம் இருக்கிறது. அதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
எடப்பாடி பழனிசாமி: பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டது, சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாலியல் பலாத்கார வழக்குகள் எத்தனை பதிவு செய்யப்பட்டுள்ளது, இதர வழக்குகள் என்ன என்பதை விளக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு என நிறைய இருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை புகாரை பொறுத்தமட்டில், உடனடியாக, இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து எல்லோருக்கும் தெரியும். குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டு, ஏற்கனவே நான் இந்த அவையில் உறுதி அளித்ததைப்போல, உயர் நீதிமன்ற மேற்பார்வையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. இந்த புகாரின்மீது காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை உயர் நீதிமன்றமே பாராட்டியிருக்கிறது. எந்த பாலியல் புகாராக இருந்தாலும், 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருகிறது இந்த அரசு.
கடந்த காலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எப்படிக் குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டார்கள்? அதிமுக என்பதற்காக புகாரின்மீது நடவடிக்கை எடுக்க எப்படியெல்லாம் தாமதம் செய்தீர்கள் என்பதை மீண்டும் நான் பட்டியலிட வேண்டியிருக்கும். அதேபோல, பெண்களுக்கு எதிரான குற்றங்களை பற்றி இங்கே சொன்னீர்கள். பெண்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய குற்றங்கள் குறித்து நான் சொல்ல வேண்டுமென்றால், இந்த அரசை பொறுத்தமட்டில், எந்த குற்றம் நடந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தயவு, தாட்சண்யமின்றி கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தேசிய சராசரி 66.4 விழுக்காடு என்றால் தமிழ்நாட்டில் இந்த குற்றங்கள் 24 விழுக்காடுதான். பெண்களுக்கான எதிரான குற்றங்கள் குறைவாக இருக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் தேசிய சராசரி 4.7 விழுக்காடு என்றால் தமிழ்நாடுதான் ஒரு லட்சம் பேருக்கு, 1.1 என்ற அளவில் நாட்டில் குறைவான குற்றம் நடக்கிற மாநிலமாக இருக்கிறது. பெண்களுக்கு எதிராக வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தேசிய சராசரி 75.5 விழுக்காடு. ஆனால் தமிழ்நாட்டில் இந்த சராசரி 90.6 விழுக்காடு. 2024ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. இது எல்லாவற்றையும்விட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து, தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சியினுடைய பொள்ளாச்சி பாலியல் சம்பவம் பெண்கள் பாதுகாப்பில் ஒரு கரும்புள்ளி. ஆனால் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தீவிர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பணிக்குச் செல்லக்கூடிய பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயர்ந்திருக்கிறது. அமைச்சர் கீதாஜீவன்: அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, பொதுமக்கள் தைரியமாக புகார் கொடுக்க வருவதினால் தான் போக்சோ வழக்குகள் அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கிறார்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சென்னை முட்டுக்காடு பாலம் அருகே காரில் சென்ற பெண்களை மறித்தது பற்றி எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். கடந்த 25-1-2025 அன்று அதிகாலை கானத்தூரை சேர்ந்த பெண், உறவினரோடு காரில் சென்று கொண்டிருந்தபோது, திமுக கொடி கட்டிய ஒரு கார் உள்பட இரு கார்களில் வந்த சுமார் 7 பேர், அவரின் காரை வழிமறித்தும், பின்தொடர்ந்தும் சென்று அவர்களின் கார், தங்களின் காரின் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்று விட்டதாக சென்றுவிட்டதாக கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பீர்க்கன்கரணையை சேர்ந்த சந்தோஷ், இரும்புலியூரை சேர்ந்த சந்துரு மற்றும் 3 பேர், 1-2-2025 மற்றும் 2-2-2025 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பயன்படுத்திய இரு கார்களும் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் திமுகவின் உறுப்பினர் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல விழிப்புணர்வு அதிகம் செய்வதால்தான் பள்ளிக்கூடம், கல்லூரிகளில் பரப்புரை அதிகம் செய்யப்படுகிறது. அதனால்தான் தைரியமாக நம்மிடம் புகார் கொடுக்கிறார்கள். முந்தைய ஆட்சியில் அந்த புகார் கொடுப்பதற்கு அச்சப்பட்டார்கள். இப்போது தெம்போடு, தைரியத்தோடு வந்து புகார் கொடுக்கிறார்கள் இதுதான் உண்மை.