Wednesday, April 24, 2024
Home » கே.கே.நகரில் அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார் பைக் மீது மோதியதில் துணை நடிகர் பலி: போதையில் காரை ஓட்டிய மற்றொரு துணை நடிகர் கைது

கே.கே.நகரில் அதிகாலையில் தறிகெட்டு ஓடிய கார் பைக் மீது மோதியதில் துணை நடிகர் பலி: போதையில் காரை ஓட்டிய மற்றொரு துணை நடிகர் கைது

by MuthuKumar

சென்னை: கே.கே.நகரில் தறிகெட்டு ஓடிய கார், முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் துணை நடிகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையில் கார் ஓட்டிய மற்றொரு துணை நடிகரை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயல் தனலட்சுமி 6வது தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் பணி முடிந்து கே.கே.நகர் ஆற்காடு சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, மற்றொரு காரின் பக்கவாட்டில் மோதி, முன்னால் சென்று கொண்டிருந்த சரண்ராஜின் பைக் மீது மோதியது.

இதில் துணை நடிகர் சரண்ராஜ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த துணை நடிகர் சரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தின் போது சரண்ராஜ் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், சாலிகிராமம் எம்.சி.அவென்யூ பகுதியை சேர்ந்த பழனியப்பன் (41) என்றும், இவர் சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்தது.

பழனியப்பன் தனது நண்பர்களுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மது அருந்திவிட்டு, போதையில் தனது நண்பர்கள் 2 பேரை காரில் அழைத்துக் கொண்டு அதிவேகமாக சென்றதால் விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, துணை நடிகர் பழனியப்பனை பிடித்து போலீசார் பரிசோதனை செய்ததில் 204 மில்லி கிராம், அதாவது அதிகளவில் போதையில் இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் துணை நடிகர் பழனியப்பன் மீது போதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கே.ேக.நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

18 + three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi