Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

துபாய் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லை தந்தை - மகன் பலி: சொந்த ஊரில் தாய் தற்கொலை முயற்சி

நெல்லை: துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி நெல்லையைச் சேர்ந்த தந்தை - மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துக்கம் தாங்க முடியாமல் தாய் தற்கொலைக்கு முயன்றது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியில் உள்ள மினிக்குடி தெருவைச் சேர்ந்தவர் மாதவன் (55). இவரது மனைவி விமலா. இவர்களது ஒரே மகன் கிருஷ்ண சங்கர் (22). மாதவன் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து அங்கு தங்கி வந்தார். அவரது மகன் கிருஷ்ண சங்கர் சென்னையில் சிஏ படித்து வந்தார்.

இவர் இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக நண்பர்களுடன் துபாய்க்கு சென்றிருந்தார். ஒரு வார விடுமுறையை அங்கு கழிக்க விரும்பிய கிருஷ்ண சங்கர் கடந்த 12ம்தேதி, தந்தை தங்கியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தபோது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதியில் மூழ்கினார். அவரை காப்பாற்ற மாதவனும் இறங்கியபோது, அவரும் மூழ்கினார். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இருவரின் உடலும் துபாயிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு நெல்லையில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கிருஷ்ண சங்கரின் தாய் விமலா மற்றும் அவரது உறவினர்கள் இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. பின்னர் உறவினர்களால் சிந்துபூந்துறை மின்சாரச் சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கிருஷ்ண சங்கருடன் பள்ளி - கல்லூரிகளில் படித்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கணவரும், மகனும் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்த துக்கம் தாங்க முடியாமல் விமலா தன் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.