திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது. கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (26) மற்றும் மூர்த்தி என்கின்ற தட்சணாமூர்த்தி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வாயலூர் பழைய பாலத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, இவர்கள் அருகில் வாயலூரை சேர்ந்தவர்களான வினோத் (33) மற்றும் பாபு ஆகியோரும் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அருகில் குடித்துக்கொண்டிருந்த ஆயப்பாக்கத்தை சேர்ந்த பிரகாசுக்கும், வினோத்துக்குமிடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் தாங்கள் வைத்திருந்த சிறிய கத்தியால் வினோத்தை குத்திவிட்டு தப்பியோடினர்.
காயமடைந்த வினோத் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த சதுரங்கப்பட்டினம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தியை தேடி வருகின்றனர்.