சென்னை: மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் பெயின்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளியை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் வரும்போது மட்டும் தான் கூட்டம் காணப்படும். மற்ற நேரங்களில் வெறிச்சோடி காணப்படும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்குள்ள எஸ்கலேட்டரில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக பயணிகள் அருகில் இருந்த நிலைய மேலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, முதல் தளத்தில் இருந்து 2வது தளத்துக்கு செல்லும் நகரும் படிக்கட்டில் சடலம் கிடப்பது தெரியவந்தது.
பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மயிலாப்பூர் பிடாரி கோயில் தெருவை சேர்ந்த லூயிஸ் மேத்யூஸ் ஆரோக்கியராஜ் (45), பெயின்டர் என்பது தெரியவந்தது. இவருக்கு குடிப்பக்கம் அதிகமானதால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 10 ஆண்டுகளாக சாலை, கோயில் வாசல்களில் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ரயில்வே போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில் மதுபோதையில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டதும், அதில் லூயிசை ஒருவர் கீழே தள்ளிவிட்டதும் அதில் நகரும் படிக்கட்டில் மேலிருந்து கீழே விழுந்த லூயிசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த சேட்டு (60) என்பவரை ரயில்வே போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.