சென்னை: ஹெராயின், கொகைன் உள்ளிட்ட போதை பொருளை சென்னையில் விற்பனை செய்வதின் முக்கிய ஏஜென்டாக இருந்த ஆப்பிரிக்க நாட்டவர் உட்பட 2 பேரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிராம் கொகைன், 7 கிராம் ஹெராயின், ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மார்ச் 9ம் தேதி அண்ணாசாலை ஒயிட்ஸ் சாலை மற்றும் சுமித் சாலை சந்திப்பில் போதை பொருள் விற்பனை செய்த விக்னேஸ்வரன் (24), பாலசந்திரன்(28), யுவராஜ்(25), சுகைல்(24), பிரவீன்(31) ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து நைஜீரியர்களிடம் நடத்தி விசாரணையில் சென்னைக்கு ஹெராயின் மற்றும் கொகைன், மெத்தாபெட்டமின் உள்ளிட்ட போதை பொருள் விற்பனை ஏஜென்டாக ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த அபவுவ் (39) என்பவர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார், மேற்கு டெல்லி நிலோத்தி விரிவு பகுதியில் பதுங்கியிருந்த அபவுவ் (எ) கோட் டிஐவரி (39) மற்றும் அவருக்கு உதவியாக இருந்த டெல்லியை சேர்ந்த ராகுல் (19) ஆகியோரை கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிராம் கொகைன், 7 கிராம் ஹெராயின், 3 கிராம் மெத்தபாபெட்டமின், ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.