Wednesday, July 9, 2025
Home செய்திகள் தமிழ்நாட்டில் உடலுக்கு மிகவும் ஆபத்தான போதை மாத்திரை விற்பனை நிறுத்தம்: போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்

தமிழ்நாட்டில் உடலுக்கு மிகவும் ஆபத்தான போதை மாத்திரை விற்பனை நிறுத்தம்: போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்

by Ranjith

* தமிழ்நாடு காவல் துறை அதிரடி நடவடிக்கை

தமிழ்நாட்டில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை முக்கிய மைல்கல்லை தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள், கஞ்சாவுக்கு மாறினர். தற்போது போலீசார் கஞ்சாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியவுடன், போதை மாத்திரை சாப்பிடும் பழக்கத்திற்கு மாறினர்.

இதனால் போதை மாத்திரை விற்பனையை தடுப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. வடக்கு மண்டலத்தில் போதை மாத்திரை விற்பனை தொடர்பான நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. டபேன்டாடோல், டபால், டோபெய்ன்டா, டைடால் போன்ற ஆபத்தான மருந்துகளை, இந்தியாமார்ட் எனப்படும் மிகவும் பொதுவாக அணுகக்கூடிய ஆன்லைன் தளத்தின் மூலம் சட்டவிரோதமாக கொள்முதல் செய்வதை தமிழ்நாடு போலீஸ் கண்டறிந்தது.

இந்தியாமார்ட் தளத்தில் நடத்தப்பட்ட மருந்துக் கடைகள், பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களைத் தொடர்புகொண்டு, இந்தியாமார்ட் தளத்தில் அதைத் தேடிய பிறகு, நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிக விலையில் ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்து, வாட்ஸ்ஆப் அழைப்புகள் / இன்ஸ்டாகிராம் அழைப்புகள் மூலம் இந்த திட்டமிடப்பட்ட மருந்துகளை சட்டவிரோதமாக வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பெறுநர்களின் அடையாளங்களை மறைக்க சரியான முகவரிகளைக் தெரிவிக்காமல் டெலிவரி போன்ற கூரியர் நிறுவனங்கள் மூலம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

2024ல், இந்த நடைமுறையை கைவிட நடவடிக்கை எடுக்குமாறு இந்தியமார்ட்டுக்கு காவல் துறை அறிவுறுத்தியது, ஆனால் நிறுவனத்தின் சில விதிமுறைகளை மேற்கொள்காட்டி அவர்கள் நிராகரித்தனர். பின்னர் 2025ம் ஆண்டில், இந்தியாமார்ட்டின் இயக்குநர்கள் குற்றம் சாட்டப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த அழைப்பாணைகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை என்றாலும், இதிலிருந்து தமிழ்நாடு காவல் துறை பின்வாங்கப் போவதில்லை என்ற செய்தி தெளிவாக இருந்தது.

இதற்குப் பிறகு இந்தியாமார்ட்டின் மூத்த பிரதிநிதிகள் காவல்துறை அதிகாரிகளை வந்து சந்தித்தனர், அதில் இந்தியாமார்ட் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை என்று அவர்களிடம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள எளிதில் ஏமாறக்கூடிய இளைஞர்களுக்கு எதிராக மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சில பேராசை கொண்ட மருந்து கடைகள் துஷ்பிரயோகம் செய்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் பொது நலனுக்காக இந்தியாமார்ட் உடனடியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக இந்தியாமார்ட் தமிழ்நாடு காவல்துறைக்கு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மருந்துகளையும் சேர்த்து இன்னும் சில மருந்துகளையும் தங்கள் தளத்திலிருந்து முற்றிலும் தடை செய்யப்பட்டதை உறுதிபடுத்தும் விதமாக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தவாது:

இந்தியாமார்ட் எனும் இணையதளம் மூலமாக பட்டியலிடப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது தடுக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், போதைப்பொருள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல இளைஞர்கள் சட்டவிரோதமாக பட்டியலிடப்பட்ட மருந்துகளை வாங்க உதவியதற்காக காஞ்சிபுரம் காவல்துறை இந்தியா மார்ட் இன்டர்மெஷ் எனும் இணையதளம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் 10,000க்கும் மேற்பட்ட மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, குறைந்தது 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் பட்டியலிடப்பட்ட மருந்துகளை மற்ற மாநிலங்களிலுள்ள மருந்துக் கடைகளிலிருந்து மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி, தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்தது.

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பட்டியலிடப்பட்ட மருந்துகளை வாங்க இந்தியாமார்ட்டைப் பயன்படுத்துவதாகவும், இல்லையெனில் சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் விற்க அனுமதிக்கப்படாது. காஞ்சிபுரம் காவல்துறை முன் ஆஜராகுமாறு இயக்குநர்களுக்கு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதாவின் பிரிவு 35ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இது குறித்து வடக்கு மண்டல போலீஸ் ஐஜி ஆஸ்ரா கர்க் கூறும்போது, ‘‘சமீபத்தில் அவர்களின் மூத்த பிரதிநிதி எங்களை சந்தித்தபோது தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஏமாறக் கூடிய இளைஞர்கள் தங்கள் இணையதளத்தை பட்டியலிடப்பட்ட மருந்துகளை வாங்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றும், பொது நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம்’’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகம் கூறும்போது, ‘‘இந்தியாமார்ட் தளத்தில் நடத்தப்பட்ட பிற மாநிலங்களின் மருந்துக் கடைகள், வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களைத் தொடர்பு கொண்டன. பின்னர் அவர்கள் நிர்ணயித்த விலையை விட பல மடங்கு விலையில் அவற்றை விற்றனர். பெறுநர்களின் அடையாளங்களை மறைக்க போலி முகவரிகளை வழங்குவதன் மூலம் கூரியர் நிறுவனங்கள் மூலம் பொருட்களை வழங்கினர்’’ என்றார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா கூறும்போது, ‘‘பிற மாநிலங்களில் உள்ள சில பேராசை கொண்ட மருந்து கடைகள் இந்தியாமார்ட்டை தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. அவர்கள் அதை தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினர். சில மாதங்களுக்கு முன்பு வட சென்னையில் ஒரு இளைஞர் இந்த தளத்தின் மூலம் வாங்கிய மருந்தை ஊசி மூலம் செலுத்தி இறந்தார்’’ என்றார்.

இது குறித்து ஆஸ்ரா கர்க் மேலும் கூறுகையில், ‘‘இந்தியாமார்ட் இந்த விஷயத்தைப் புரிந்துகொண்டு எங்களுக்கு ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. அதில் அவர்களின் தளத்திலிருந்து சுமார் 100 மருந்துகளின் விற்பனையை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் அவர்களின் தளத்தின் மூலம் சட்டவிரோதமான மருந்துகள் விற்பனை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருட்களுக்கான எதிரான சமூக போராட்டத்தில் இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாக தெரிகிறது. போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களுக்கு எதிராகப் போராடும் தமிழக அரசின் உத்தரவுகளுக்கிணங்க நாங்கள் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றார். தமிழக போலீசாரின் இந்த முயற்சியால் பல இளைஞர்கள் போதை மாத்திரையை சட்டவிரோதமாக வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi