பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அருகே நேற்றிரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, 8 மாத கர்ப்பிணி மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (65). இவரது மனைவி இந்திராணி (51). இவர்களது மகள் தீபிகா (23). சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்தாண்டுதான் திருமணம் நடந்தது. இவரது கணவர் நித்திஷும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் தீபிகா கர்ப்பம் தரித்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் பிரசவத்துக்காக, தந்தை பத்மநாபன் வீட்டுக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் அம்பத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பத்மநாபன், இந்திராணி, தீபிகா ஆகியோருடன் சென்றார். நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு 11 மணியளவில் 3 பேரும் ஒரே கால்டாக்சியில் சந்தோஷபுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். கால் டாக்சியை அம்பத்தூர், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த புவனேஷ் (23) என்பவர் ஓட்டினார். தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலை, அனகாபுத்தூர் அடுத்த காமராஜபுரம் அருகே வந்தபோது, எதிரே தவறான பாதையில் தாறுமாறாக ஒரு கார் அதிவேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கார், பத்மநாபன் வந்த கால் டாக்சி மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திராணி, தீபிகா மற்றும் புவனேஷ் ஆகியோர் பலத்த காயத்துடன் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்திராணி, புவனேஷ் ஆகியோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இந்திராணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் கந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பத்மநாபனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து, தவறான வழியில் எதிர் திசையில் வந்து விபத்து ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, அன்னியூர், புது காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அளவுக்கு அதிகமாக மது போதையில் வாகனத்தை இயக்கி, தவறான வழியில் வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.