தாம்பரம்: தாம்பரத்தில் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பெண் போலீஸ் சமாதானம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று மாலை ஒரு ஆசாமி, சாலை நடுவே அமர்ந்து, மதுபானம் வாங்கி கொடுத்தால்தான் இங்கிருந்து எழுந்து செல்வேன் என கூறி அடம்பிடித்துள்ளார். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு முயற்சி செய்தும் அந்த ஆசாமியை சாலையிலிருந்து எழுந்திருக்க வைக்கமுடியவில்லை, இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையறிந்து அங்கு வந்த தாம்பரம் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்ட நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, எழுந்து வரும்படி கூறினர்.
போலீசாரை மதிக்காமல் அந்த ஆசாமி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், வலுக்கட்டாயமாக போலீசார் அவரை சாலையில் இருந்து இழுத்து கொண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆசாமி, கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசினார். இதனால் பயந்துபோன போலீசார் ஓட்டம் பிடித்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண் போலீஸ் உதயராணி அந்த ஆசாமியை சமாதானப்படுத்தி பிரியாணி வாங்கி கொடுத்தார். அதன்பிறகு பிரியாணி சாப்பிட்டுவிட்டு அந்த ஆசாமி அங்கிருந்து எதுவும் நடக்காதுபோல் சென்றுள்ளார். இந்த சம்பவம் சானடோரியம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.