சென்னை: ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா செல்லவிருந்த பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் ஸ்டென்ட் செய்ய முயன்று விபத்தில் சிக்கினார். விபத்தை தொடர்ந்து டி.டி.எஃப். வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்குபதிவு செய்திருந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றது. நேற்று காலை டி.டி.எஃப். வாசனை போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அச்சமயம், யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது தொடர்பாக, யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இன்று நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை செய்திருந்தது. இன்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் டிடிஎஃப் வாசனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற உள்ளனர். டிடிஎஃப் வாசனின் விளக்கத்தை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.