சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.1,538.35 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல் ரயில் 2027ல் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில்களை (மொத்தம் 32 பெட்டிகள்) தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1,538.35 கோடியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பராக் நந்தலால் கோஹெல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதற்கான ஏற்பு கடிதம் 28.4.2025 அன்று அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, வழங்கல், சோதனை, ஆணையிடுதல், பணியாளர்களுக்கான பயிற்சி, மெட்ரோ ரயில் மற்றும் பணிமனை இயந்திரங்களுக்கு 15 ஆண்டுகள் முழுமையான பராமரிப்பு உள்ளிட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரயில் 2027ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
அதை தொடர்ந்து 14 மாதங்களுக்கு கடுமையான பாதைகள் மற்றும் ஓட்டுநர் இல்லாத ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்படும். இதில் பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு சோதனை மற்றும் சேவை சோதனைகள் அடங்கும். அதன்பின் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் செப்டம்பர் 2027 முதல் மே 2028 வரை ஒவ்வொரு கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம், இரண்டாம் கட்ட திட்டத்திற்கான ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தமாகும். முதல் இரண்டு ஒப்பந்தங்கள் முன்பே வழங்கப்பட்டுள்ளது.