டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் விபரீதம் தந்தையின் தோளில் தூங்கிய 9 மாத குழந்தை பஸ்சிலிருந்து விழுந்து பலி: கதவை மூடச்சொல்லியும் மூடாமல் மெத்தனம்
சேலம்: தர்மபுரி மாவட்டம் வேப்பிலை முத்தம்பட்டி கருங்கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (31), இவர் குடும்பத்துடன் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இரண்டரை ஆண்டுகளாக கட்டுமான வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் சொந்த ஊரான கருங்கல்லூருக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். மீண்டும் கோவை செல்ல நேற்று முன்தினம் இரவு மனைவி, 2 குழந்தைகளுடன் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 8.30 மணியளவில் அரசு பஸ்சில் பயணித்தார். டிரைவர் சீட்டிற்கு பின்னால் உள்ள முதல் சீட்டில் மனைவி முத்துலட்சுமி, 7 வயது மகள் இருந்துள்ளனர். அதற்கு அடுத்த பின் சீட்டில் (முன்பக்க படிக்கட்டின் அருகில்) ராஜதுரை, கைக்குழந்தை நவநீஷை தோளில் போட்டு தூங்க வைத்தபடி இருந்துள்ளார்.
குழந்தை தூங்கியநிலையில், முன்பக்க படிக்கட்டு கதவை அடைக்கும்படி கண்டக்டரிடம் ராஜதுரை கூறியுள்ளார். ஆனால், கதவை அடைக்காமல் இருந்துள்ளனர். சங்ககிரியை அடுத்த வளையகாரனூர் மேம்பாலத்தில் இரவு 10.15 மணியளவில் பஸ் சென்றபோது, திடீரென டிரைவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது ராஜதுரையின் தோளில் தூங்கிய கைக்குழந்தை நவநீஷ், தூக்கி வீசப்பட்டு படிக்கட்டு வழியே கீழே விழுந்தான். உடனே பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கி சென்று குழந்தையை தம்பதியும், இதர பயணிகளும் மீட்டனர். அப்போது குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வெளியேறியது. அவ்வழியே வந்த காரை மறித்து, குழந்தையை குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் சிவன்மணி மீது தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


