தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்து நகர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் அந்தோணி விஜயன் (40), ஆட்டோ டிரைவர். இதே பகுதி சுனாமி காலனியை சேர்ந்த முருகன் மகள் காளீஸ்வரி (16). உறவினர்களான இவர்கள் உள்ளிட்ட பலர் நேற்று முன்தினம் மாலை தாளமுத்து நகரில் நடந்த குடும்ப விழாவிற்கு வந்திருந்தனர். விழா முடிந்ததும் அந்தோணி விஜயன் மற்றும் காளீஸ்வரி, அவரது தம்பி உள்பட 7 பேர், தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடற்பகுதியில் குளிக்கச் சென்றனர்.
அப்போது திடீரென காளீஸ்வரி ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். ராட்சத அலையில் சிக்கி உயிருக்கு போராடிய அவரை அந்தோணி விஜயன் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் இருவரும் கடலில் மூழ்கி பலியாகினர். நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பட்டி கடற்பகுதியில் காளீஸ்வரியின் உடலும், நேற்று காலை அந்தோணி விஜயனின் உடலும் கரை ஒதுங்கியது.