Saturday, July 12, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் நெருங்கிய உறவுகளை கைவிடாதீர்கள்!

நெருங்கிய உறவுகளை கைவிடாதீர்கள்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

ஒரு தனி மனிதனின் அத்தியாவசிய தேவை உணவு, உடை, உறைவிடம் என்பதையும் தாண்டி மனித உறவுகளும் வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மனிதன் மரணிக்கும் தருவாயில் உடனிருந்து நல்லடக்கம் செய்வது நெருக்கமான உறவுகள்தான். ஆனால், உறவுகள் ஏதுமின்றி ஆதரவற்ற நிலையில் மறித்தவர்களை நெருக்கமான உறவுகளின் ஸ்தானத்தில் இருந்து நல்லடக்கம் செய்து வருகிறது திருச்சியை சேர்ந்த ‘அமிர்தம்’ சமூக சேவை அறக்கட்டளை.

அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் மகள் என மூவருமாக இணைந்து குடும்பமாக அறக்கட்டளை மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். “நான் ஒரு யோகா ஆசிரியர். என் மனைவி சித்ரா ஒரு வழக்கறிஞர். என் மகள் கீர்த்தனா சட்டப் படிப்பை படித்துக்கொண்டிருக்கிறார்’’ என்று பேசத் துவங்கினார் விஜயகுமார். ‘‘அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை தொடங்கி ஆதரவற்றோருக்கு என்னால் முடிந்த சேவைகளை செய்த போது எனக்கு உறுதுணையாக இருந்தவர் என் மனைவிதான். இப்போது என் மகளும் எங்களுடன் இணைந்து சேவைகளை செய்து வருகிறார்.

அறக்கட்டளை தொடங்கிய போது, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவது மற்றும் உதவிகளை செய்வது போன்ற பொதுவான சேவைகளை தான் செய்து கொண்டிருந்தேன். அதில் பகல் நேரங்களில் யாசகம் கேட்பவர்கள் இரவு நேரங்களில் அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் செல்ல இடம் இருக்காது. யாரிடமும் எதுவும் எதிர் பார்க்க மாட்டார்கள். யாரேனும் தேடி வந்து உதவினால் மட்டுமே பெற்றுக்கொள்வார்கள். இது போன்றவர்கள்தான் உறவுகள் யாருமின்றி, உணவுத்தேட வழியின்றி, உறைவிடம் இன்றி அலைகின்றனர். அவர்களுக்கு தினமும் உணவளிக்க ஆரம்பித்தோம்.

மாலை 4.30 மணிக்கு மேல் தினமும் இவர்களைப் போன்ற ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம். இதற்காக நாங்க நிதி திரட்டுவதில்லை. மாறாக, திருமண நிகழ்வுகள், உணவகங்களில் கைப்படாத மீதமாகும் உணவுகளை சேகரித்து அதனை இவர்களுக்கு வழங்க ஆரம்பித்தோம். இப்போது, எங்கு உணவு மீந்துவிட்டாலும், என்னை தொடர்பு கொள்கிறார்கள். உணவிற்கு அடுத்து உடை. ஆடைகளின்றி இருப்பவர்களுக்கும் உடைகளை வழங்கி வருகிறோம். இரவு நேரங்களில் சாலைகளில் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு போர்வைகள் வழங்குவோம். ஆதரவில்லா தவர்களுக்கு உணவும், உடையும் கொடுக்க முடிந்தது. ஆனால் அவர்களுக்கு உறைவிடம் இல்லை என்பதால், ஃபிளாட்பாரங்களில் வசிப்பார்கள்.

அவர்களை இல்லங்களில் சேர்த்து, உறைவிடமும் அமைத்து தந்தோம். ஆனால், சிலர் தன் போக்கில் இருப்பார்கள். அவர்கள் மரணத்தை தழுவும்போதுதான் ஆதரவற்ற சடலங்களாக கிடக்கின்றனர். உடல்களை உரிமைக்கோரி யாரும் வரமாட்டார்கள். அவர்களை நல்லடக்கம் செய்யும் சேவையினை தொடங்கினோம். கேட்பாரற்ற நிலையில் இறந்து இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியவந்தால் முதலில் காவல்துறைக்கு தெரிவிப்போம்.

அவர்களின் விசாரணை முடிந்து, உடலை உரிமைக்கோர யாரும் இல்லை என்று உறுதி செய்தபின்னர், எங்களை தொடர்பு கொள்வார்கள். நாங்க உறவுகள் ஸ்தானத்தில் இருந்து, மலர் மாலைகள் சூடி, பிரார்த்தனை செய்து முறையாக நல்லடக்கம் செய்து விடுவோம். சில நேரங்களில் மருத்துவமனைகளில் இருந்தும், காவல்துறையிடம் இருந்தும் எங்களுக்கு தகவல் வரும்” என்றவர் இதுகுறித்து பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

“பெற்றோர்கள் கைவிடப்படுவதே இதுபோன்ற ஆதரவற்றோர் உருவாக முதல் காரணம். எங்களின் முதல் அறிவுரை வயதானவர்களை கைவிடாதீர்கள் என்பதுதான். பார்த்துக்கொள்ள இயலாத பட்சத்தில் முதியோர் இல்லங்களில் சேர்க்கலாம். இதுகுறித்து மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சில சமயம் நீர்நிலைகளில் இருந்து சடலங்கள் கரையோரம் ஒதுங்கும். சிதைந்த நிலையில் உள்ள சடலங்களை கையாளுவது சிரமமாக இருக்கும். அந்த நிலையில் என் மகளும் மனைவியும் எனக்கு உதவியாக இருப்பார்கள்” என்றவரை தொடர்ந்தார் மகள் கீர்த்தனா.

“அப்பாவின் சேவையை பார்த்து வளர்ந்ததால், பள்ளி படிக்கும் போதே எனக்கும் அதே மனப்பான்மை எழுந்தது. ஒருநாள் நானும் அப்பாவும் சாலையில் நடந்து போகும் போது வயதான பாட்டி ஒருவர் ஆடையின்றி இருந்தார். உடனே அவருக்கு உடை வாங்கி கொடுத்தோம். அன்று முதல் நானும் அப்பாவுடன் சேவை செய்ய தொடங்கினேன். அதற்காக என் சேமிப்பு பணத்தில் ஒரு பங்கை கொடுப்பேன். உணவு வழங்குவது முதல் உடைகள் கொடுப்பது, நல்லடக்கம் செய்வது என அனைத்து சேவைகளும் நானும் செய்த வருகிறேன்.

பெண்கள் அடக்கம் செய்யும் இடங்களுக்கு போகக்கூடாது என்பார்கள். ஆனால் இறந்த உடலை தொட்டு தூக்கி அடக்கம் செய்து மரியாதை செலுத்தும் வரை எல்லாம் நான் செய்திருக்கேன். மனிதர்களை அடக்கம் செய்வதில் ஆண், பெண் பாகுபாடுகள் தேவையில்லை.

அன்பு இருந்தாலே போதுமானது. அப்பா தொடங்கிய அமிர்தம் அறக்கட்டளை மூலம் மேலும் நிறைய சேவைகளை செய்யணும் என்பது என் விருப்பம். யாருமேஇல்லாதவங்களை நல்லடக்கம் பண்ண நாங்க தயாரா இருக்கோம். ஆனால், உறவுகள் இருக்கிறீர்கள் எனில் அவர்களை கைவிடாதீர்கள். மரணிக்கும் போது அடக்கம் செய்யக்கூட யாருமில்லாத நிலை கொடுமையானது” என்றார் கீர்த்தனா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi