மெல்போர்ன்: ஆஸ்திரேலியா முன்னாள கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டருக்கு (55), குடும்ப வன்முறை வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ஸ்லேட்டர், ஆஸி கிரிக்கெட் அணிக்காக 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில், 14 சதங்களுடன் 5312 ரன்களை குவித்துள்ளார். தவிர, 42 ஒரு நாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். ஸ்லேட்டர் மீது, கடந்த 2023ம் ஆண்டு முதல் குடும்ப வன்முறை வழக்கு, கழுத்தை நெரித்தல், கொள்ளை, பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தன் தவறை அவரும் ஒப்புக் கொண்டு தண்டனையில் இருந்து விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஸ்லேட்டருக்கு குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி கிளென் கேஷ் உத்தரவிட்டுள்ளார். ஸ்லேட்டர் செய்த குற்றங்கள் அனைத்துக்கும் அவரது குடிப்பழக்கமே காரணம் என, நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏற்கனவே ஒரு ஆண்டுக்கும் மேலாக ஸ்லேட்டர் சிறைவாசம் அனுபவித்து வருவதால் விரைவில் அவர் விடுதலை செய்யப்படலாம் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.