Sunday, July 20, 2025
Home செய்திகள்Showinpage டாக்டர் குடும்பத்தில் 4 பேர் தனித்தனி அறையில் தூக்கிட்டு சாவு: அண்ணாநகரில் அதிர்ச்சி

டாக்டர் குடும்பத்தில் 4 பேர் தனித்தனி அறையில் தூக்கிட்டு சாவு: அண்ணாநகரில் அதிர்ச்சி

by Suresh

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த டாக்டர் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுசம்பந்தமாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சென்னை அண்ணாநகர் மேற்கு 17வது பிரதான சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள 2 வது தளத்தில் கடந்த 3 வருடங்களாக டாக்டர் பாலமுருகன் (57), மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார்(19), லிங்கேஷ்குமார்(16) ஆகியோர் வசித்து வந்தனர். டாக்டர் பாலமுருகன், அண்ணாநகர் 13வது பிரதான சாலையில் ஸ்கேன் சென்டர் நடத்திவந்தார். சுமதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு தற்போது பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதில், மூத்த மகன் ஜஸ்வந்த்குமார் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். மற்றொரு மகன் லிங்கேஷ்குமார், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துள்ளார்.

இன்று காலை 7 மணி அளவில், டாக்டர் பாலமுருகன் வீட்டு வேலைக்கார பெண் ரேவதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதற்கு என்ன மாத்திரை போடவேண்டும் என்று கேட்பதற்காக பாலமுருகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் செல்போனில் ரிங் அடித்துகொண்டே இருந்துள்ளது. யாரும் போனை எடுத்து பேசவில்லை என்பதால் பதற்றம் அடைந்த வேலைக்கார பெண் உடனடியாக சுமதி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அந்த போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் மேலும் பதற்றம் அடைந்தார். இதையடுத்து, அடுத்தடுத்து டாக்டரின் மகன்களின் செல்போனுக்கு அழைத்தபோதும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்றதும் வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பதற்றத்துடன் டாக்டர் வீட்டுக்கு வந்த ரேவதி, நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றதும் அக்கம்பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார். ஆனால் உதவிக்கு யாரும் வராததால் அங்கேயே கதறி அழுதபடி சுற்றி, சுற்றி வந்துள்ளார். இதன்பிறகு ஒருசிலர் வந்து கேட்டபோது விஷயத்தை தெரிவித்ததும் உடனடியாக முன்பக்க கதவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ஒரு அறையில் டாக்டர், அடுத்தடுத்த அறைகளில் தனித்தனியாக மகன்கள், மற்றொரு அறையில் டாக்டரின் மனைவி ஆகியோர் தூக்கில் பிணமாக கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததும் போலீசார் விரைந்துவந்தனர். பின்னர் வீட்டில் சென்று விசாரித்தனர். இதுபற்றி அறிந்ததும் திருமங்கலம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அண்ணாநகர் மேற்கு இணை ஆணையர் கல்யாண், அண்ணாநகர் துணை ஆணையர் சிநேகபிரியா ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். இதில், டாக்டர் பாலமுருகன், மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த், லிங்கேஷ் ஆகியோர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

டாக்டர் பாலமுருகன் நடத்திவந்த ஸ்கேன் சென்டர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அந்த தொழிலை விரிவு படுத்த வங்கிகளில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதன்காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர், குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டார்களா, வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருமங்கலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார், தற்கொலைக்கு முன்பு டாக்டர் வீட்டுக்கு யாராவது வந்தார்களா என அந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து வருகின்றனர். வீட்டில் ஏதாவது கடிதம் எழுதி வைத்துள்ளார்களா என்று வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். தற்கொலை செய்வதற்கு முன் தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்களா? கடைசியாக யார், யார் பேசினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi