Wednesday, July 9, 2025
Home செய்திகள்அரசியல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை முதல்வர் தொடங்கி வைத்த மறுநிமிடமே அனைத்து மாவட்டங்களிலும் வீடுவீடாக மக்களை சந்திக்க தயாராகும் திமுகவினர்

‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை முதல்வர் தொடங்கி வைத்த மறுநிமிடமே அனைத்து மாவட்டங்களிலும் வீடுவீடாக மக்களை சந்திக்க தயாராகும் திமுகவினர்

by Arun Kumar

* தமிழக அரசின் திட்டங்களை எடுத்துரைக்க திட்டம்
* எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் செயல்பாடு குறித்தும் கேட்டறிகின்றனர்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தொடர்ந்து, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘உடன் பிறப்பே வா’’ என்ற பெயரில் ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இதற்கிடையே, திமுகவின் மதுரை பொதுக்குழு கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில் திமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும், அதனுடன் திமுக உறுப்பினர் சேர்க்கையையும் மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.

ஓரணியில் தமிழ்நாடு திமுகவின் உறுப்பினர் சேர்க்கைக்கான பணியை வரும் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைக்கிறார். அடுத்த நாள் அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாம் பேரணியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தொடங்கி வைக்க உள்ளனர்.

அதை தொடர்ந்து, ஜூலை 3ம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குச்சாவடிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் வாக்குச்சாவடி முகவர்கள், தகவல் தொழில்நுட்ப துறை முகவர்கள், இளைஞர் அணி, மகளிரணி போன்றவற்றின் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் ஒவ்வொரு பூத்களிலும் இருக்கக்கூடிய வீடுகளுக்கு நேரடியாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிடம் அமர்ந்து, அங்கே இருக்கும் வாக்காளர் பெருமக்களில் 30 சதவீதம் பேரை திமுகவில் இணையக்கூடிய வகையில் அரசியல் பணியாற்ற உள்ளனர்.

இந்நிலையில் மொபைல் வேன் மூலமாக தமிழக அரசின் திட்டங்களை திமுகவினர் விளக்க உள்ளனர். இதுகுறித்து சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மயிலை த.வேலு எம்எல்ஏ கூறியதாவது: தேர்தல் பணி என்று வந்தால் என்றுமே திமுகதான் முதல் ஆளாய் களத்தில் நிற்கும். தற்போதும் அப்படிதான். இந்த முறை வெறும் தேர்தல் பணியாக மட்டுமில்லாமல் நான்கு ஆண்டு கால ஆட்சியின் மக்கள் நல திட்டங்கள் முறையாகச் சென்றடைந்திருக்கிறதா, மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என்பதை பற்றிய கள ஆய்வாகவும் இது அமைய வேண்டும் என்று தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக இந்த ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் வீடு வீடாக சென்று நேரில் சந்தித்து பேச இருக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தொடங்கி வைத்த மறு நிமிடமே தொகுதி வாரியாக மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தொடங்க உள்ளோம். ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சந்தித்து மக்களோடு மக்களாக அமர்ந்து ேபச உள்ளோம். திமுக அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்ததா என்றும் கேட்க உள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் சீர்மிகு சென்னை 2.0 எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்க உள்ளோம். மேலும், தொகுதியில் உள்ள எம்எல்ஏக்கள், கவுன்சிலர்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் மக்களிடம் கேட்க உள்ளோம்.

மக்களை சந்திக்கும் போது தமிழக அரசின் 5 திட்டங்கள் குறித்து மக்களிடம் கேட்க உள்ளோம். சரியாக பதில் அளிக்கும் மக்களுக்கு கிப்ட் அளிக்க உள்ளோம். அதுமட்டுமல்லாமல் மெட்ராஸ் என்று இருந்த போது எவ்வாறு இருந்தது, சென்னை என்று மாற்றப்பட்ட பிறகு சென்னை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை விளக்கும் வகையில் மொபைல் வேன் மூலமாக பிரசாரம் செய்ய உள்ளோம். சென்னை தென்மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலாப்பூர், தி.நகர் ெதாகுதியில் இந்த பிரசாரம் முழு வீச்சில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi