சென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா, பிரியங்கா ஆகியோர் நேற்றிரவு சென்னை வந்தனர். சோனியா, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்களுக்கு இன்று பிற்பகலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருந்து அளிக்கிறார். தலைவர்கள் வருகையையொட்டி நகர் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கலைஞர் அனைத்து துறைகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும்-பெண்ணுரிமைக்காகவும் மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார்.
அவர்தான், அரசு வேலைவாய்ப்பிலும்-உள்ளாட்சித் தேர்தலிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்டவற்றை திமுக ஆட்சியில் முதல்வராக இருந்து சட்டமாக்கினார். தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வாயிலாக, “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்”, “பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம்”, “புதுமைப் பெண் திட்டம்”, “மகளிர் சுய உதவிக் குழுக்கள்”, “மகளிரை அர்ச்சகராக்கியது” என பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை அடுத்தடுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது திமுகவின் நீண்ட கால கோரிக்கை. அத்தகைய மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஒன்றிய பாஜ அரசின் 9 ஆண்டுகால மறதிக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஆனால் அதுவும், மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் உடனடியாக அமலுக்கு வர முடியாத நிலையில், 2029ம் ஆண்டு வரும் என்று தெரிவித்துள்ளனர். அதுவும் நிச்சயமற்றதாக உள்ளது.
எனவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாக கருதி திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இந்த பிரமாண்ட மாநாடு இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.
மாநாட்டிற்கு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் வரவேற்கிறார். மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஐக்கிய ஜனதா தளம் தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், அமைச்சருமான லெஷி சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாக குழு உறுப்பினரும், டெல்லி சட்டப்பேரவை துணை தலைவருமான ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு முக்கிய அகில இந்திய பெண் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ராணி நன்றி கூறுகிறார்.
பெண்ணுரிமைப் போற்றும் இந்த மாநாட்டில் திமுக மகளிர் அணியைச் சார்ந்த அனைவரும்-தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் சகோதரிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர்கள் இரவு 10.50 மணியளவில் ஐடிசி கிராண்ட் சோழாவிற்கு சென்றனர். இரவு 2 பேரும் அங்கேயே தங்கினர்.
ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்களை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மூத்த தலைவர்கள் சந்தித்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிற்பகலில் ஐடிசி கிராண்ட் சோழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளர் கனிமொழி ஆகியோர் விருந்து அளிக்கிறார்கள். இந்த விருந்தில் சோனியா, பிரியங்கா உள்ளிட்ட மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். விருந்தின் போது மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் மாநாடு நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ திடலுக்கு சோனியா, பிரியங்கா ஆகியோர் காரில் புறப்பட்டு செல்கின்றனர். மாநாட்டில் கலந்து கொண்டு இரவு 7 மணிளவில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இரவு அங்கேயே தங்குகின்றனர். தொடர்ந்து நாளை காலை 6.30 மணியளவில் சோனியா, பிரியங்கா ஆகியோர் சென்னை விமான நிலையம் புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காலை 6.55 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
சோனியா வருகையையொட்டி சென்னை விமானம் நிலையம் முதல் தங்கும் ஓட்டல் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக டெல்லியில் இருந்து, சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். விழா நடைபெறும் ஒய்எம்சி திடலிலும் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். மேலும். சோனியா, பிரியங்கா பயணிக்கும் கார்கள், செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சோனியா, பிரியங்காவை வரவேற்க காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.