சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராடுவதாக போஸ்டர் அடித்து நாடகம் ஆடுவதா என்று எடப்பாடிக்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வைக் கொண்டுவந்தது பாஜ. நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்க மறுப்பது பாஜ. நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை காவு வாங்குவது பாஜ. நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தீர்மானத்தை திருப்பி அனுப்பியது பாஜ.
இப்படி நீட் தேர்வு எனும் பயங்கரவாதத்தின் மூலம் தமிழ்நாடு மாணவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும் பாஜவுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் களத்திலும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராடுவதாக போஸ்டர் அடித்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார். உண்மையில் அதிமுகவின் இந்த செயல் நாடகம் அல்ல பகல் வேஷம். பதவிக்காக அமித்ஷாவின் கால்களைப் பற்றிக்கொண்டிருக்கும் பழனிசாமி தன் எஜமான பாசத்தை காட்ட இன்னும் என்னவெல்லாம் நாடகம் ஆடப் போகிறார் என்பதை பார்க்கத்தானே போகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.