பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் “கலைஞர் என்றால் பேரறிவு காலம் தந்த தமிழமுது” என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பெரம்பூர் செம்பியம் ராகவன் தெருவில் நடைபெற்றது. இதற்கு கொளத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் ஐ.சி.எப் முரளிதரன் தலைமை வகித்தார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனித நேயம் மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுக கொள்கை பரப்பு செயலாலர் சபாபதிமோகன் பேசினர். இந்த கூட்டத்தில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது; கலைஞர் வாழ்க்கையே போராட்டமான வாழ்க்கைதான். சிறுவயதில் இருந்து போராடினார். மரணத்திற்கும் பின்னும் போராடியவர் கலைஞர். எல்லாத்துறைகளிலும் சாதனை படைத்தவர்.
அவர் தொடாத துறைகளே அல்ல, பல்கலைக்கழகங்களில் படித்தவர் அல்ல. ஆனால் பல பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்யும் அளவிற்கு சாதனை படைத்தவர். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை உருவாக்கியவர். தமிழகத்தில் இனிமேல் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற கனவில் பாஜ இருந்திருப்பார்கள். ஆனால் கலைஞரைவிட பல மடங்கு வலுவாக எதிர்ப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு ஆளுநர் அமைதியாக கூட இருப்பார். ஆனால் பாஜகவுக்கு எதிராக தினமும் நம் முதல்வர் போர் முரசுக் கொட்டுகிறார். இது அண்ணாமலைக்கும் ஆளுநருக்கும் பிடிக்கவில்லை. ரெய்டு நடத்தி எதிர்கட்சியினை பயமுறுத்த நினைக்கிறார்கள். இவையெல்லாம் திமுகவிற்கும் கூட்டணி கட்சிகளுக்கும் காலில் போட்டுள்ள செருப்பிற்கு சமம். அவசர நிலையை கொண்டு வராமல் எதிர்த்தவர் கலைஞர். 1000 ரூபாய் கொடுத்ததை விட அதற்கான பெயர் தான் சிறப்பு.
பாஜக தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயும் தலைதூக்கமுடியாது. இவ்வாறு பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில், கிரிராஜன் எம்.பி, பகுதி செயலாளர் நாகராசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.