சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல விரும்பும் பொதுமக்கள் இதுவரை 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து துறை தரப்பில் வரும் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து பிற இடங்களுக்கு செல்ல 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல 5,920 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு 16,895 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் நேரடியாக டிக்கெட்டுகளை கோயம்பேடு மற்றும் தாம்பரம் சானடோரியத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 மையங்களிலும், ஆன்லைன் மூலமாக போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்டுள்ள இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், விரைவு பேருந்துகளில் வரும் 9ம் தேதி பயணம் மேற்கொள்ள 25 ஆயிரம் பேரும், 10ம் தேதிக்கு 45 ஆயிரம் பேரும், 11ம் தேதி பயணிக்க 20 ஆயிரம் பேரும் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக தீபாவளி பண்டிகைக்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், ஊர் திரும்புவதற்காக 12ம் தேதி பிற இடங்களில் இருந்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல 5 ஆயிரம் பேரும், 13ம் தேதி 26 ஆயிரம் பேரும், 14ம் தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.