Tuesday, December 5, 2023
Home » தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்: 1.20 லட்சம் பேர் முன்பதிவு

தீபாவளியை கொண்டாட சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்: 1.20 லட்சம் பேர் முன்பதிவு

by Karthik Yash

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. அதன்படி இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து பிற ஊர்களூக்கும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து மட்டும் 1,365 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 1,100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இதுவரை இந்த சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 3 நாட்களுக்கு சேர்த்து இதுவரை 1.20 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர நகரின் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பயணிகள் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களும். மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களில் புகாரளிக்கலாம்.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையும் 24 மணி நேரமும் செயல்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதால் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து மற்ற இடங்களுக்கும் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* பேருந்துகளின் இயக்கம் குறித்து பயணிகள் அறிந்து கொள்ள, இயக்கம் குறித்து புகார் தெரிக்க
94450 14450
94450 14436

* ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு
1800 425 6151
044-24749002
044-26280445
044-26281611

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?